

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 60,836 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 30 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,052 ஆக நிலைகொண்டிருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 60,609 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,000 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்திருந்தது போன்ற காரணங்களால் 420 புள்ளிகள் வரை பெரும் வீழ்ச்சிகண்டு 60,485 புள்ளிகள் என்ற எதிர்மறை போக்கிலேயே இந்திய வர்த்தக சந்தை தொடங்கியது. ஆனாலும் சற்றே மீண்டு 70 புள்ளிகள் சரிவுடனேயே சந்தை நிறைவடைந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 69.68 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 60,836.41 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 30.15 புள்ளிகள் சரிந்து 18,052.70 ஆக நிலைகொண்டது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், விப்ரோ போன்ற பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.