

புதுடெல்லி: கடந்த ஆண்டு அதிக நன்கொடை வழங்கிய இந்தியர்களின் பட்டியலில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார். சென்ற ஆண்டில் அவர் ரூ.1,161 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
எடில்கிவ் ஹுருன் அமைப்புஆண்டுதோறும் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்தப் பட்டியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி முதல் இடம் வகித்து வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஷிவ் நாடார் முதல் இடம் பிடித்துள்ளார்.
சராசரியாக ஷிவ் நாடார் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக எடில்கிவ் ஹுருன் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில், அஸிம் பிரேம்ஜி ரூ.484 கோடி நன்கொடை வழங்கி 2-வது இடத்திலும், முகேஷ் அம்பானி ரூ.411 கோடி நன்கொடை வழங்கி 3-வது இடத்திலும் உள்ளனர்.
4-வது இடத்தில் குமார் மங்களம் பிர்லா (ரூ.242 கோடி), 5-வதுஇடத்தில் சுப்ரோதோ பாக்சி மற்றும் அவரது மனைவி சுஸ்மிதா (ரூ.213 கோடி), பார்த்தசாரதி மற்றும் அவரது மனைவி ராதா (ரூ.213 கோடி) உள்ளனர். 7வது இடத்தில் கவுதம் அதானி (ரூ.190 கோடி), 8-வது இடத்தில் வேதாந்த குழுமத் தலைவர் அனில் அகர்வால் (ரூ.165 கோடி), 9-வது இடத்தில் நந்தன் நிலகனி (ரூ.159 கோடி), 10-வது இடத்தில் ஏஎம் நாயக் (ரூ.142 கோடி) உள்ளனர்.