உரிய கணக்கு இல்லாமல் வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அபராதம்

உரிய கணக்கு இல்லாமல் வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அபராதம்
Updated on
2 min read

வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தகவல்

வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால், வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா நேற்றிரவு கூறியதாவது:

நேற்று முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையிலான 50 நாட்களில் வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்கள் பெறப்படும். பணத்துக்கு முறையான கணக்கு இல்லை என்றால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்குகளை, வருமான வரித் துறையினர் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர் தெரிவித்துள்ள வருமான வரி கணக்குகள் சரியாக இல்லை என்றால், வரி ஏய்ப்பு செய்தவராக கருதப்படுவார்.

சிறு வணிகர்கள், வீட்டுப் பெண்கள், தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வங்கியில் டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை வரி வருவாயை விட குறைவாக இருப்பதால் வருமான வரித் துறையினரால் அவர்களுக்கு தொந்தரவு இருக்காது.

தங்க நகை வாங்குபவர்களிடம், ‘பான்’ எண் வாங்காமல் விற்பனை செய்யும் நகைக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம் பர் 30-ம் தேதி வரை டெபாசிட் செய்யப்படும் அனைத்து தொகை கள் பற்றிய அறிக்கைகள் வருமான வரித்துறையிடம் இருக்கும். ஒரு வங்கிக் கணக்குக்கு 2.5 லட்சம் மட்டுமே உச்சவரம்பு. வருமான வரித் தாக்கல் செய்துள்ளதற்கும் டெபா சிட் செய்துள்ளதற்குமான வித்தியா சம் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை முதல் ரூ.100, ரூ.50

இன்று முதல் ஏடிஎம் இயந்திரங் களில் 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். இதன் மூலம் பொதுமக்கள் மிகக் குறைந்த பணத்தை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளமுடியும். பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவச சேவையை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஏடிஎம்களில் உடனடியாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் கிடைக்காது

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிவருகின்றனர்.

உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்காது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் அமைப்புக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகே ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கிடைக்கும். எனவே பொதுமக்கள் அதற்கு ஏற்ப முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில மாதங்களில் புதிய 1,000, 100, 50 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சக்திகாந்த தாஸ் கூறுகையில் ``புதிய வடிவத்தில் புதிய வண்ணத்தில் இன்னும் சில மாதங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். அனைத்து ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பையும் இனி தேவைக்கு ஏற்ப மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே இன்னும் சில மாதங்களில் புதிய வடிவங்களில் ரூபாய் நோட்டுகளை காணலாம். புதிதாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு எப்படி உள்ளது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மக்கள் பயன்படுத்தி ஆதரவு கொடுப்பதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in