Published : 12 Oct 2022 05:56 AM
Last Updated : 12 Oct 2022 05:56 AM

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை விரைவில் அனுப்பும் - அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை

புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி இந்திய விண்வெளி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் டாடா குழுமம் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் விண்வெளித் துறை யில் தனியாரும் பங்கேற்க கடந்த 2020-ம் ஆண்டில் அனுமதி வழங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விண்வெளித் துறை சார்ந்த 102 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு அக். 11-ம் தேதி இந்திய விண்வெளி கூட்டமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது இந்த கூட்டமைப்பை சேர்ந்த தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ விண்வெளித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

விண்வெளி துறை சார்ந்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்திய விண்வெளி கூட்டமைப்பு உறுதுணையாக இருந்து வருகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் எல் அண்ட் டி, எச்.ஏ.எல். உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விரைவில் அதிநவீன ராக்கெட்களை விண்ணில் செலுத்தும். அந்த ராக்கெட்கள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x