Published : 03 Oct 2022 07:39 PM
Last Updated : 03 Oct 2022 07:39 PM

தமிழக வணிக வரி, பத்திரப் பதிவு துறையில் ரூ.20,000 கோடி கூடுதல் வருவாய்

அமைச்சர் மூர்த்தி | கோப்புப் படம்

சென்னை: வணிக வரி, பத்திரப் பதிவு துறையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.20,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வணிக வரி மற்றும் பதிவுத் துறை வசூல் தொடர்பாக அமைச்சர் பி. மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிக வரித் துறையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரி வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வரி வருவாய் ரூ.66,161 கோடி ஆகும். இது கடந்த வருடத்தில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ.47,873 கோடியை விட ரூ.18,288 கோடி அதிகமாகும். வணிக வரி வசூலில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதைப்போலவே பதிவுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனை எய்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் வசூல் ரூ.1,610 கோடியைத் தாண்டியுள்ளது. 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான காலகட்டத்தில் பதிவான ஆவணங்களின் எண்ணிக்கை 17,56,977 ஆகும். வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.8,696 கோடி. கடந்த வருடத்தில், அதாவது 30.9.2021 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.6,208 கோடி என்ற நிலையில் கடந்த ஆண்டை விட பதிவுத் துறையில் ரூ.2,488 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது.

இதன்படி வணிக வரித் துறையும் பதிவுத் துறையும் சேர்ந்து கடந்த ஆண்டைவிட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளன" என்று அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x