Published : 27 Nov 2016 12:27 PM
Last Updated : 27 Nov 2016 12:27 PM
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை ஏப்ரல் 1, 2017-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. இரண்டு கூட்டங்களில் மாநில அரசுகள் தெரிவித்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டு திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரைவு மசோதா விரைவிலேயே கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க வைக்கப்பட உள்ளது. டிசம்பர் 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த திருத்தப்பட்ட வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வரைவு ஜிஎஸ்டி சட்டம், ஐஜிஎஸ்டி சட்டம், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டம் ஆகியன மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் குறித்து டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று வருவாய்த்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி சட்டம் இறுதி செய்யப்பட்டபிறகு அதற்கேற்ப மாநில அரசுகள் தங்களது வரி விதிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கவுன்சிலின் சட்ட துணைக் குழு கூட்டம் நேற்று முன் தினம் டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி)யானது ஜிஎஸ்டி மாதிரி சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதற்கேற்ப மாநில அரசுகள் மாநில ஜிஎஸ்டியை (எஸ்ஜிஎஸ்டி)யை வடிவமைக்க வேண்டும். இது சிஜிஎஸ்டி-யிலிருந்து சற்று வேறுபடும்.
மொத்தம் நான்கு வரைவு மசோதாக்கள் அதாவது மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மாநில வரி வருவாய் இழப்பீடு சட்டம் ஆகியவற்றுக்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். முதலில் ஜிஎஸ்டி கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT