Published : 22 Sep 2022 08:59 AM
Last Updated : 22 Sep 2022 08:59 AM

கவுதம் அதானியின் சகோதரர் ஒரு நாள் வருமானம் ரூ.102 கோடி

துபாய்: உலக கோடீஸ்வரர்கள் பட்டி யலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். இந்த நிலையில், அவரது மூத்த சகோதரர் வினோத் சாந்திலால் அதானியும் தற்போது அதிக சொத்து மதிப்பைக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியராக (என்ஆர்ஐ) உருவெடுத்துள்ளார். இவர் நாளொன்றுக்கு ரூ.102 கோடி வருவாயை ஈட்டி வருகிறார்.

துபாயில் குடியிருந்து வரும் வினோத் அதானி, சிங்கப்பூர், ஜகர்த்தா, துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வர்த்தகம் செய்து வருகிறார். கடந்த ஓராண்டில் இவரது சொத்து மதிப்பு 28 சதவீதம் அதிகரித்து ரூ.37,400 கோடியை எட்டியுள்ளது என ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் 2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்ததையடுத்து இந்தியாவில் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் வினோத் அதானி இரண்டு இடங்கள் முன்னேற்றம் கண்டு ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐஐஎஃப்எல் கோடீஸ்வரர் பட்டியலில் 94 வெளிநாடுவாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதானி தினசரி ரூ.102 கோடி வருவாயை ஈட்டி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இந்தியாவின் பணக்கார பெண்

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் பெண்கள் பிரிவில் ‘நைகா’ நிறுவனத்தின் நிறுவனர் ஃபால்குனி நாயர் முதல் இடம் பிடித்துள்ளார். ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு ரூ.38,700 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் அவர் ரூ.30,000 கோடி சொத்து சேர்த்துள்ளார்.

மும்பையில் வணிகப் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஃபால்குனி நாயருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இயல்பிலே இருந்தது. இந்நிலையில் 2012-ம் ஆண்டு தன்னுடைய ஐம்பதாவது வயதில் அழகு சாதனங்கள் மற்றும் ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ‘நைகா’வை தொடங்கினார். இத்துறையில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ‘நைகா’ வளர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலானது. இதையடுத்து, சுயமாக தொழில் தொடங்கிபெரும் சொத்து ஈட்டிய பெண்கள் வரிசையில், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷாவை பின்னுக்குத் தள்ளி ஃபால்குனி நாயர் முதல் இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 345 சதவீதம் உயர்ந்த நிலையில், இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் சென்ற ஆண்டு 169-வது இடத்திலிருந்த ஃபால்குனி நாயர் இவ்வாண்டு 33-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x