

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வரும் 13-ம் தேதி இணைய வழியில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்புத்தாக்க நிறுவனம், தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் வரும் செப்.13-ம் தேதி இணைய வழியில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி காலை 9.30 முதல், பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
உதவிகள், திட்டங்கள் விவரிக்கப்படும்: முதல் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி, தொழில் தொடங்க இருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி முகாமில் விவரிக்கப்படும்.
பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 044-22252081, 9444557654 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.