

புதுடெல்லி: வர்த்தகம், தொழில்நுட்பம், திறமை ஆகிய மூன்று தூண்களில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நம்பிக்கையின் பங்களிப்பு மேலும், மேலும் வலுவடைந்து வருவதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூல் கோயல் மேலும் கூறும்போது, "புகழ்பெற்ற வணிக நிபுணர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தொழில்துறையின் மூத்த தலைவர்கள், புதிய தொழில் தொடங்குபவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருடன் நான் கலந்துரையாடினேன். அப்போது அவர்கள் இந்தியாவுடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆலோசனைகள் மற்றும் புதிய வழிகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இதுகுறித்து அவர்களிடையே காணப்படும் தனிப்பட்ட உற்சாகம் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது” என்றார்.
முன்னதாக, சான் ஃபிரான்சிஸ்கோவின் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி தனது நாளைத் தொடங்கிய அமைச்சர், கதர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர், அமெரிக்காவிலுள்ள 6 பிராந்தியங்களில், இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள, உலகளாவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், இந்தியா மற்றும் இந்திய வம்சாவழியினருக்கான அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.