Published : 02 Sep 2022 05:25 AM
Last Updated : 02 Sep 2022 05:25 AM

திவால் நிலையில் இருக்கும் இலங்கையை மீட்டெடுக்க ரூ.23,000 கோடி நிதி - சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புதல்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) உதவிகோரி இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு நிதி உதவி வழங்க நேற்று ஐஎம்எஃப் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகால அளவில் 2.9 பில்லியன் டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) நிதி வழங்க இருப்பதாகவும் தற்போது முதற்கட்டமாக அதிகாரிகள் அளவிலான ஒப்பந்தம் நிறைவேறி உள்ளது என்றும் ஐஎம்எஃப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கும் நாட்டை மீட்டெடுக்க ஐஎம்எஃப் நிதி உதவி வழங்கும்போது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும். வரி விதிப்பு முதல் நிதி ஒதுக்கீடு வரையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டை ஐஎம்எஃப் வலியுறுத்தும். இதற்கு அந்நாடு சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் மட்டுமே நிதி உதவி வழங்கப்படும்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஜூலை மாதத்தில் தீவிரமடைந்தது. அதையடுத்து கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து வெளிநாடு தப்பிச் சென்று அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். தற்போது ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட பட்ஜெட்டில் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை அடுத்து இலங்கைக்கு ஐஎம்எஃப் நிதி உதவி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

உள்நாட்டில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்படாததால், இலங்கை வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வந்தது. இதனால், இலங்கையில் வெளிநாட்டுக் கடன் மிகப் பெரும் அளவில் அதிகரிக்கத் தொடங்கியது. 2019-ல் அதிபர் பதவிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே வரிவிகிதங்களைக் குறைத்தார். இதனால், நாட்டின் வரிவருவாய் பெரும் சரிவுக்கு உள்ளானது. அதேபோல், ரசாயன உரங்களுக்கு தடைவிதித்தார். இதனால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிவந்த சுற்றுலாத் துறை கரோனா சமயத்தில் பெரும் முடக்கத்தை சந்தித்தது. இந்தச் சூழல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தின.

வெளிநாட்டுக் கடன் அதிகரித்ததால் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து திவால் நிலைக்கு இலங்கை உள்ளானது. தற்போது அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை உள்ளது. எரிபொருளுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கும், மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x