Published : 27 Aug 2022 07:28 PM
Last Updated : 27 Aug 2022 07:28 PM

மின்சார உற்பத்தியை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மும்பை: “சர்க்கரை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடி செலவிடுகிறோம். எனவே, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்” என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

மும்பையில் இன்று தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: “எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்று எரிபொருள் உற்பத்தி குறித்து, தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள் தொகையில் 65% -70% பேர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், நமது வேளாண் வளர்ச்சி வீதம் 12%-13% ஆக மட்டுமே உள்ளது.

சர்க்கரை ஆலைகளும், விவசாயிகளும் தான் நாட்டின் வளர்ச்சி இயந்திரம். சர்க்கரை மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் விதமாக, அடுத்த கட்டமாக இணை உற்பத்தியில் கவனம் செலுத்துவது அவசியம். தொழிற்சாலைகள் சர்க்கரையை குறைந்த அளவுக்கு உற்பத்தி செய்வதுடன், உபபொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அறிவாற்றலை சொத்தாக மாற்ற, எதிர்காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களை, தொலைநோக்குப் பார்வையுடன் அணுக வேண்டும். இதுபோன்று செய்தால், விவசாயிகள் உணவுப்பொருள் சாகுபடியாளர்களாக மட்டுமின்றி, எரிசக்தி உற்பத்தியாளர்களாகவும் திகழ முடியும்.

இந்த ஆண்டில், நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம் டன்னிற்கு அதிகமாக உற்பத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் நிலவும் சூழல் காரணமாக இதனைப் பயன்படுத்த முடியும். பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் கோடி செலவிடுகிறோம். எனவே, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு ஏதுவாக, விவசாயத்தை பல்வகைப்படுத்த வேண்டும்

எத்தனால் தேவை மிக அதிகமாக உள்ளதால், எத்தனால் உற்பத்தியை நோக்கி நாம் கவனம் செலுத்துவது அவசியம். கடந்த ஆண்டின் உற்பத்தித் திறன் 400 கோடி லிட்டர் எத்தனால் ஆக இருந்தது; எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். எனவே, எத்தனால் தேவையை கணக்கிட்டு, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உயிரி எத்தனால் மூலம் இயங்கக்கூடிய மின்சார உற்பத்தி குறித்து தொழிற்சாலைகள் திட்டமிடுவதற்கு இதுவே சரியான தருணம்.

பல வகையான எரிபொருட்களைப் பயன்படுத்தக் கூடிய எஞ்சின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களை நெகிழ்வுத்தன்மை கொண்ட என்ஜின்களை உற்பத்தி செய்துவருகின்றன. பல்வேறு கார் உற்பத்தியாளர்களும், இத்தகைய எஞ்சின்களைக் கொண்ட காரைத் தயாரிப்பதாக உறுதியளித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x