Published : 19 Aug 2022 06:13 PM
Last Updated : 19 Aug 2022 06:13 PM

பணமாக மாறும் பயணிகளின் தரவுகள்: ரூ.1,000 கோடி வருவாய் ஈட்ட ஐஆர்சிடிசி திட்டம்

சென்னை: பயணிகளின் தரவுகளை பணமாக மாற்ற முடிவு செய்துள்ளது ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம். இது தொடர்பாக திட்டங்களைத் தயார் செய்ய டெண்டர் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

உலகில் நான்காவது பெரிய ரயில் நிறுவனமாக இந்தியன் ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் 67,956 கி.மீ அளவுக்கு ரயில் பாதை இந்தியாவில் உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ரயில்கள் 808.6 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மூலம் முன்புதிவு செய்கின்றனர். 90 சதவீதம் பேர் இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி செயலி மூலம் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்கின்றனர்.

ரயில் தவிர்த்து பேருந்து, விமானம் உள்ளிட்டவற்றுக்கான பயணச் சீட்டு, விடுதிகள், உள்ளூர் மற்றம் வெளிநாடு சுற்றுலா தொடர்பாக பேக்கேஜ்கள், உணவு ஆகிவற்றை முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு பயணம் மற்றும் சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து தகவல்களும் கொண்ட இணையதளமாக ஐஆர்சிடிசி இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான கணக்கை தொடங்க பெயர், பிறந்த தேதி, இ-மெயில், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணை இணைத்தால் கூடுதல் பயணச் சீட்டுகளை முன்பதிவு கொள்ளலாம். இதன்படி கோடிக்கான பயணிகளின் தரவுகள் ஐஆர்டிசியிடம் இருக்கும்.

இந்நிலையில், இந்த தரவுகளை பணமாக மாற்ற ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில்வே நிறுவனம் பயன்படுத்தி வரும் மற்ற தரவுகளை பணமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசர்களை நியமிக்க Appointment of Consultant for Digital Data Monetization of Indian Railway/IRCTC என்ற பெயரில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆலோசர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் பல்வேறு ரயில்வே இணையதளங்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, அதை பணமாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயார் செய்து அளிக்க வேண்டும் என்று கூறப்படுள்ளது. இதன்மூலம் ரூ.1000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின் உற்பத்தி, மின் விநியோகம், இயற்கை எரிவாயு குழாய், விளையாட்டு மைதானங்கள், ரியல் எஸ்டேட் என அரசு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. இதற்கு ‘நாடு விற்கப்படுகிறது’ என்று எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த வழியில், தற்போது பயணிகளின் தரவுகளை பணமாக மாற்ற முடிவு செய்துள்ளது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x