Published : 18 Aug 2022 06:30 AM
Last Updated : 18 Aug 2022 06:30 AM

காலாவதியான பாலிசிகளை மீட்க எல்ஐசி நிறுவனம் சிறப்பு திட்டம்: வரும் அக். 21 வரை புதுப்பிக்கலாம்

சென்னை: எல்ஐசி நிறுவனம் காலாவதியான பாலிசிகளை மீட்க சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் விட்டுவிட்ட தங்களின் பாலிசிகளை அக்டோபர் 21-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பு புதுப்பிப்பு முகாமில், பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத அனைத்து பாலிசிகளும், சலுகை தாமதக் கட்டணத்துடன் புதுப்பிக்கப்படும். பிரீமியம் செலுத்தாமல் நிறுத்தப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள அனைத்து பாலிசிகளும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பிக்கப்படும்.

ரூ.1 லட்சம் வரையிலான பாலிசிகளுக்கு தாமதக் கட்டணத்தில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2,500 தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பாலிசிகளுக்கும் தாமதக் கட்டணத்தில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.3,000 தள்ளுபடி உண்டு.

மேலும், ரூ.3 லட்சம் அதற்கு மேல் உள்ள பாலிசிகளுக்கு தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம், அதிகபட்சமாக ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கும். மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு தாமதக் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி உண்டு. அதேசமயம், மருத்துவ தேவைகளில் எந்த சலுகையும் கிடைக்காது.

பாலிசியைப் புதுப்பிக்கச் செல்லும் தேதியில் காலாவதியாகாமல் இருக்கும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியும். தவிர்க்க முடியாத காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாமல்போன பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இவ்வாறு எல்ஐசிநிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x