Published : 08 Aug 2022 02:43 PM
Last Updated : 08 Aug 2022 02:43 PM

புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கொச்சினுக்கு அக்டோபர் முதல் விமான சேவை

புதுச்சேரி விமான நிலையம்.

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து திருப்பதி, கொச்சினுக்கு வரும் அக்டோபரில் இருந்து விமான சேவை தொடங்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து கடந்த 2013ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூக்கு விமான சேவையை தொடங்கின. ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமானக் கொள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து தடைப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது அதன்படி மீண்டும் சேவையை தொடங்கியது.

அதன்பின்னர் பெங்களூர் விமான சேவை நிறுத்தப்பட்டது. கரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது. இப்போது மீண்டும் ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்கியது.

புதுவைக்கு கூடுதலாக 3 விமான சேவை: இந்நிலையில், வரும் அக்டோபர் முதல் புதுவையிலிருந்து திருப்பதி, கொச்சினுக்கு விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஏர் இந்தியா நிறுவனம் புதுவையிலிருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடங்க உள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x