Published : 27 Jul 2022 08:58 PM
Last Updated : 27 Jul 2022 08:58 PM

பிஎஸ்என்எல் மறுசீரமைப்புக்காக ரூ.1.64 லட்சம் கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிதி ரீதியாக லாபகரமாக மாற்றும் நோக்குடன் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் தொகுப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் இயங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். கடந்த மே 31-ம் தேதி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தரவுகளின் படி நாட்டின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியே இதற்கு காரணமாக என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என மூன்று தனியார் நிறுவனங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முதற்கட்ட ஏலம் நடந்தது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

‘கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துதல், உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் பிஎஸ்என்எல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிஎஸ்என்எல்-ஐ நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பிஎஸ்என்எல்-ன் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்புத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவதற்கு புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அதன் இருப்புநிலைக் குறைப்பு மற்றும் பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்புகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இது குறித்து மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் ஆகியோரும் ட்வீட் செய்துள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவன சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும். குறிப்பாக 4ஜி சேவைகளை வழங்குவது மற்றும் நிறுவனத்தை லாபகரமாக இயங்க செய்யவும் உதவும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x