Published : 26 Jul 2022 09:42 PM
Last Updated : 26 Jul 2022 09:42 PM

மின்வாகனத் துறை சிறந்து விளங்க இந்தியா என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்வாகனங்களை நோக்கி தீவிரமாக நகர்ந்துவருகின்றன. இதனால், உலக அளவில் வாகனத் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துவருகிறது. இந்திய சூழல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

சந்தையும் இலக்கும்: கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் 4.20 லட்சம் மின்வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் இரு சக்கர வாகனங்கள் 2.3 லட்சம், மூன்று சக்கர வாகனங்கள் 1.78 லட்சம், நான்கு சக்கர வாகனங்கள் 19,500 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. இது 2020-21-ம் நிதி ஆண்டு விற்பனையைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களில் 80 சதவீதம் மின்னாற்றலில் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கார்களில் 30 சதவீதம் மின்னாற்றலில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹீரோ எலெக்ட்ரிக், ஓலா எலெக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, மகிந்திரா எலெக்ட்ரிக், ஒலெக்ட்ரா க்ரீன்டெக், அசோக் லேலண்ட், ஒகினாவா, ஆம்பியர் ஆகிய நிறுவனங்கள் மின்வாகன தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன.

இந்தியாவில் தற்போதைய இரு சக்கர மின்வாகனச் சந்தையில் ஹீரோ எலெக்ட்ரிக் 32 சதவீதம், ஒகினாவா 21 சதவீதம், ஏதர் எனர்ஜி 11 சதவீதம் பங்கு வகிக்கின்றன. நான்கு சக்கர மின்வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் 71 சதவீதமும் எம்ஜி இந்தியா 27 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.

சவால்கள்: ‘மின்வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் இந்திய தட்பவெட்ப நிலைக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம். பேட்டரி வடிவமைப்பிலும் ஏதாவது குறைபாடு இருக்கக்கூடும். செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் குறைந்த தரம் கொண்ட பொருள்களை உபயோகிப்பதும் கூட இந்த விபத்துக்களுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்று இத்துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். மின் வாகனத்தின் பேட்டரிகள் வெடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் நிகழ்கிறது. இந்நிலையில் பேட்டரி தயாரிப்பு சார்ந்து உலக அளவில் மிகத் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மின்வாகனத் துறை என்பது மூன்று தளங்களில் செயல்படுகிறது. முதலாவது மின்வாகனத் தயாரிப்பு. இரண்டாவது, மின்வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு. மூன்றாவது பேட்டரி தயாரிப்பு. முதல் இரண்டு தளங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

பேட்டரி தயாரிப்பைப் பொறுத்தவரையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது உலக நாடுகள் பேட்டரி தயாரிப்பில்தான் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. உலக அளவில் பேட்டரி உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது. பேட்டரி தயாரிப்பில் தன்னை மேம்படுத்திக் கொள்வதன் மூலம்தான் இந்தியா மின்வாகனத் துறையில் சிறந்து விளங்க முடியும்.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x