ரூ.8.6 லட்சம் கோடி வாராக் கடன் வசூல் - நிதித்துறை இணை அமைச்சர் தகவல்

ரூ.8.6 லட்சம் கோடி வாராக் கடன் வசூல் - நிதித்துறை இணை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 8 நிதி ஆண்டுகளில் வங்கிகளில் கடன் பெற்று திரும்பாக் கடனாக (பேட் லோன்) கருதப்பட்ட தொகையில் ரூ.8.6 லட்சம் கோடி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இதுகுறித்து எழுத்து மூலமாக அவர் அளித்த பதில் வருமாறு: சர்வதேச அளவில் ஏற்பட்ட தேக்க நிலையால் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்தது. இதில் பேட் லோன் எனப்படும் திரும்பாக் கடனும் அடங்கும்.

ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் தொடர்ந்து 8 நிதி ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கோடி கடன் தொகை வசூலாகியுள்ளது. வாராக் கடனை அடையாளம் கண்டு அதை வசூலிப்பதில் வங்கிகளுக்கு தொடர் அறிவுறுத்தலை ரிசர்வ் வங்கி அளித்தது. இதனால் திரும்பாக் கடன்கள் வசூலானது என்று காரத் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைந்த வகையில் ரிசர்வ் வங்கி மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வாராக் கடன் அளவு குறைந்தது. வர்த்தக வங்கிகள் அளித்த கடனில் திரும்பாக் கடனாக இருந்த ரூ.8,60,369 கோடி தொகை கடந்த 8 நிதி ஆண்டுகளில் வசூலிக்கப்பட்டதாக காரத் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in