Published : 22 May 2016 09:38 AM
Last Updated : 22 May 2016 09:38 AM

ஆப்பிள் போன் விற்பனையை மிஞ்சியது சாம்சங்

இந்தியாவில் பிரீமியம் ரக போன் விற்பனையில் அமெரிக்காவின் ஆப்பிள் ஐ போன் விற்பனையை விட அதிக எண்ணிக்கையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான விலையிலான போன்கள் விற்பனையில் சாம்சங் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகியுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் சாம்சங் நிறுவன விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் பாயின்ட் டெக்னாலஜி நிறுவனம் திரட்டிய தகவல் தொகுப்பின்படி பிரீமியம் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத் தயாரிப்புகள் 47 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. 45 சதவீத இடத்தைப் பிடித்து ஆப்பிள் தயாரிப்புகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன் மற்றும் நோட் 5 உள்ளிட்டவை அந்நிறுவன விற்பனை அதிகரிப்புக்கு முக்கி யக் காரணமாகும். மேலும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விலையைக் குறைத்ததும் சாம்சங் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

2014-15-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத் தயாரிப்புகள் 35 சதவீத விற்பனை சந்தையைப் பிடித்து இரண்டாவது இடத்தில் இருந்தது. அந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் விற்பனை 43 சதவீதமாக இருந்தது.

உயர் ரக ஸ்மார்ட்போன்களைப் பொருத்தமட்டில் சாம்சங் அறிமுகப்படுத்திய எட்ஜ் மாடல் கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதே நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் ஆப்பிள் நிறு வனத்தின் எஸ்இ மாடல் விலை அதிகமாக இருந்ததும் விற்பனை சரிவுக்கு முக்கியக் காரணமாகும். ஐ-போன் 7 மாடல் அறிமுகத்துக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் விலை அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆப்பிள், சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளிடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் பிரீமியம் பிரிவில் ஹெச்டிசி மற்றும் சோனி நிறுவனங்கள் தங்களது சந்தையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x