Published : 02 Jul 2022 07:00 AM
Last Updated : 02 Jul 2022 07:00 AM

ஏற்றுமதி பெட்ரோல், டீசல் வரி அதிகரிப்பு - தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி: இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே அளவுக்கு ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் 600 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 67 கோடி டாலர் அளவுக்குத்தான் இறக்குமதி செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் மீது ஒரு டன்னுக்கு ரூ.23,250 செஸ் விதிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மீதானதாகும். இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு இது பொருந்தாது. ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா, வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இங்கு கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 2.9 கோடி டன் அளவுக்கு கச்சா எண்ணெய் எடுக்கின்றன. இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் ரூ. 67,425 கோடியாகும்.

இதேபோல ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீது சிறப்பு கூடுதல் உற்பத்தி வரி அல்லது செஸ் ஆக லிட்டருக்கு ரூ.6-ம், விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.13-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

பெட்ரோல், டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

15 தினங்களுக்கு ஒரு முறை கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்யும் அதனடிப்படையில் புதிய வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அசாதாரண சூழலில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டது கிடையாது. அதேசமயம் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவும் சூழலில் ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் கிடைத்தாலும், நமது குடிமகன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மதிப்பு குறைவதால் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது தாக்கம் இருக்கும் என்பதை அரசு உணர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறப்புப் பொருளாதார மண்ட லங்களுக்கும் இந்த புதிய வரி விதிப்பு பொருந்தும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x