Published : 29 Jun 2022 05:04 PM
Last Updated : 29 Jun 2022 05:04 PM

வரலாற்றில் முதன்முறை: இந்திய ரூபாய் மதிப்பு 79 ஆக  சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 79 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளன. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. சீனாவில் கரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77 ஆக சரிவடைந்தது. பின்னர் ரூபாயின் மதிப்பு மே மாதத்தில் 77.28 ரூபாயாக சரிவினைக் கண்டது.

இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் சரிவு கண்டுள்ளது. இன்று காலை தொடக்கம் முதலே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதிகபட்சமாக மாலை 79 ரூபாயாக சரிந்தது.

இன்று முதல் முறையாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு 79 ரூபாயாக சரிவடைந்தது. இந்திய ரூபாய் மதிப்பு 19 பைசா குறைந்து ஒரு டாலருக்கு 79.04 ஆக குறைந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. டாலர் மதிப்பிலால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x