Published : 23 Jun 2022 04:05 PM
Last Updated : 23 Jun 2022 04:05 PM

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: 69% இறக்குமதி செய்த ரிலையன்ஸ், நயாரா 

மும்பை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ள நிலையில் இதில் 69 சதவீதத்தை ரிலையன்ஸ் மற்றும் நயாரா ஆகிய இரு நிறுவனங்கள் வாங்கி சுத்திகரித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுககு ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெய் அளவு மே மாதத்தில் சுமார் 16.5 சதவீதமாகும். ஜூன் மாதத்தில் இது மேலும் உயரக்கூடும். ஜூன் மாத இறக்குமதி 1.05 மில்லியன் பீப்பாய்கள் என்ற உச்ச எண்ணிக்கையை தொடும் என நம்பப்படுகிறது.

பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 30 டாலர் விலைக்கும் குறைவாகவே ரஷ்யா வழங்குகிறது. இதனால் இந்தியாவின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன.

ரிலையன்ஸ்

தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 1.2 மில்லியன் பேரல்கள் திறன் கொண்ட சுத்திகரிப்பு வளாகத்தை இயக்குகிறது. இந்த நிறுவனம் மே மாதத்தில் 10.81 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் சுத்திகரித்து இதே துறைமுகத்தில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

மே மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த கச்சா இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்தது. தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய எண்ணெயை அதிகஅளவில் ரிலையன்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. ரிலையன்ஸ், மே மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1.4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்து 9.1 சதவீதம் அதிகமாகும்.

சிக்கா துறைமுகத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் மே மாதத்தில் ஐரோப்பாவிற்கு 2.56 மில்லியன் பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது. ஏப்ரல் மாதம் 890,000 பீப்பாய்கள் பெட்ரோலை அமெரிக்காவிற்கு அனுப்பியது. இவை ரஷ்யாவில் வாங்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் மட்டுமல்லாமல் இந்தியாவின் இரண்டாவது பெரிய சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் நயாரா எனர்ஜி நிறுவனமாகும். ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்கிறது.

நயாரா

நயாரா ரஷ்யாவின் ரோஸ் நேபிட்டின் துணை நிறுவனத்திற்கும், சரக்கு வர்த்தகரான ட்ராபிகுராவின் துணை நிறுவனத்திற்கும் சொந்தமானது. இது குஜராத்தின் வாடினாரில் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வருகிறது. இந்த துறைமுகம் மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 340,000 பீப்பாய்கள் டீசலை ஏற்றுமதி செய்தது, இது நயாராவால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு நிறுவனமான வோர்டெக்சாவின் மதிப்புபடி மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் ரிலையன்ஸ் மற்றும் நயாரா இணைந்து 69 சதவீத பங்களிப்பை செய்துள்ளன. தொடர்ந்து இந்த நிறுவனங்கள் ஜூன் மாதத்திலும் சாதனை அளவுக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எனத் தெரிகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மே மாதத்தில் சராசரியாக 280,000 பீப்பாய்கள் ரஷ்யா கச்சா எண்ணெய் வந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x