Published : 20 Jun 2022 08:26 PM
Last Updated : 20 Jun 2022 08:26 PM

எம்ஜிஎம் நிறுவனத்தில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரிச் சோதனையில் தகவல்

கோப்புப் படம்

புதுடெல்லி: பிரபல தொழில் நிறுவனமான எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.400 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் முன்னணி தொழில் நிறுவனங்களை நடத்தும் குழுமத்தின் பல்வேறு வர்த்தக இடங்களில் வருமான வரித்துறையினர் ஜூன் 15-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்பட 40-க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையின் போது, பல்வேறு போலி ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. போலியான கொள்முதல் ரசீதுகளை கணக்குப்புத்தகங்களில் பதிவு செய்து ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருள்கள் விநியோகிப்போருக்கு காசோலை மூலம் பணம் வழங்கி பின்னர் அதனை பணமாக பெற்றுக் கொண்டு கணக்கில் வராத முதலீடுகளாக மாற்றப்பட்டிருப்பது, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து கண்டறியப்பட்டது. சர்வதேச சங்கிலித்தொடர் ஓட்டல்களில் இந்தியாவில் இருந்து மறைமுக செயல்பாடுகளில் இந்த குழுமம் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

சோதனை நடவடிக்கையின் மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ.3 கோடி ரொக்கமும், ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x