Published : 20 Jun 2022 09:42 PM
Last Updated : 20 Jun 2022 09:42 PM

யுனிகார்ன் | பட்டிலினத்தவர்களுக்கான வாய்ப்பை யார் உருவாக்கித் தருவது? - சிவராஜா ராமநாதன் பேட்டி

ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. அப்படியாக, தமிழ்நாடு மேற்கொண்டிருக்கும் முயற்சிதான் ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்று அடையாளப்படுத்தப்படும் ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்’ (Tamil Nadu Startup and Innovation Misson). சுருக்கமாக டான்சிம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சார்ந்து தமிழ்நாடு அரசு கொண்டிருக்கும் திட்டம் என்ன, தற்போது தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்து டான்சிமின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதனுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ்நாட்டில் டான்சிம் என்ன செய்யப்போகிறது?

சிறந்த ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் மானியத்தை அரசு அளிக்கிறது. இதற்கென பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடி பிரிவினர் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கினால் அவற்றை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், டெண்டர் கோராமல் ரூ.50 லட்சம் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யலாம் என்பதற்கான அரசாணை புதிதாக போடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஸ்டார்ட்அப் சிந்தனையை உருவாக்க, ஐஐடி-யில் இருப்பதைப் போன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.55 கோடி செலவில் ஐடிஎன்டி மையம் உருவாக்கப்படுகிறது. இதை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இந்தியாவில் பெங்களூரில்தான் அதிக எண்ணிக்கையில் யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்குவது சார்ந்து திட்டம் வைத்துள்ளீர்களா?

யுனிகார்ன் நிறுவனங்களை அரசோ அல்லது தனிப்பட்ட நபர்களோ உருவாக்க முடியாது. அந்நிறுவனம் சார்ந்திருக்கும் துறையின் வளர்ச்சிதான் அதைத் தீர்மானிக்கிறது. யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் தாண்டி, வலுவான நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களது பிரதான நோக்கம்.

வருமானம் ஈட்டுவதில் வலுவாக உள்ள நிறுவனங்களை வளர்த்தெடுக்கவே விரும்புகிறோம். இத்தகைய ஸ்டார்ட்அப்-களின் மதிப்பீடு குறைவாக இருந்தாலும், இவற்றின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. அடிப்படைகள் வலுவாக உள்ள நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர்களை சென்றடைவது உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்கும்போது அவை யுனிகார்ன் நிலையை எட்டும்.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளீர்களா? உதாரணத்துக்கு கல்வி, மருத்துவம்...

சில அடித்தளக் கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக, சாஸ் நிறுவனங்களின் கட்டமைப்பு தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது. இவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தெடுப்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம். உரிய சந்தை வாய்ப்பு இல்லாமலேயே இந்த அளவுக்கு வளர்ந்துள்ள இந்நிறுவனங்களுக்கு டான்சிம் ஆதரவு அளித்தால் அவர்கள் மேலும் வளர்வதற்கு வாய்ப்புள்ளது.

பெருநகரங்கள் தவிர்த்து இரண்டாம் நிலை நகரங்களுக்கு ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சென்னையில் உள்ள வாய்ப்புகளும், வசதிகளும் பிற நகரங்களில் உள்ளவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த ஏற்றத்தாழ்வை போக்கும் முயற்சியாக இரண்டாம்நிலை நகரங்களிலும் ஸ்டார்ட்அப்மையங்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு நகரங்களில் ஸ்டார்ட்அப் மையங்கள் தொடங்கப்படுகின்றன.

பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினருக்கென ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?

ஒரு அரசு லாபம் ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்க முடியாது. கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமல்ல தொழிற்துறையிலும், சமூகரீதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் இன்று இந்த அரசு கருதுகிறது.

ஸ்டார்ட்அப் என்பது புதுமையானது.சராசரி தொழிலுக்கும், ஸ்டார்ட்அப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. லேத் பட்டரை நடத்துவது போல அல்லது ஹோட்டல் ஆரம்பிப்பது போல் அல்ல ஸ்டார்ட்அப். ஸ்டார்ட்அப் என்பது புதிய சிந்தனை உருவாக்கம். பல தொழில்களை உள்ளடக்கியது. இதற்கு உலகளாவிய பார்வை தேவைப்படுகிறது.

பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கு, குறிப்பாக ஐஐடி போன்றவற்றில் படிப்பவர்களுக்கு ஸ்டார்அப் நிறுவனங்களை தொடங்குவது தொடர்பான சிந்தனை அதிகம் உள்ளது. எல்லாருக்கும் ஐஐடியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை.

யுனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவற்றை உருவாக்கியவர்களில் பட்டிலினத்தவர்களோ அல்லது பழங்குடியினத்தவர்களோ இருப்பதில்லை. எனில், அவர்களுக்கான வாய்ப்பை யார் உருவாக்கித் தருவது? அரசுதான் செய்ய வேண்டும். அது அரசின் கடமையும்கூட!

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x