Published : 20 Jun 2022 12:56 PM
Last Updated : 20 Jun 2022 12:56 PM

‘‘மன்னிக்கவும், உங்கள் பணத்தை இப்போது திருப்பித் தர முடியாது’’ - வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சிகள்; அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள் 

நியூயார்க்: பிட்காயின் உட்பட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் பெரும் சரிவு கண்டு வரும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர். மன்னிக்கவும், ஆனால் இப்போது உங்கள் பணத்தை எங்களால் திருப்பித் தர முடியாது என பரிவர்த்தனை நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக அண்மைகாலமாக இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமானது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொகையை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர். கிரிப்டோகரன்சிகளில் முறைகேடான பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன.

கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் பணம் ஈட்ட முடியும் என்ற ஆசை உள்ளதோ அதே அளவுக்கு பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கிரிப்ட்டோகரன்சி சரிவு

இந்தநிலையில் கிரிப்டோகரன்சிகள் கடந்த சில தினங்களாக கடும் சரிவு கண்டு வருகின்றன. பிட்காயின். சனிக்கிழமை அன்று சுமார் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 17,599 டாலர் என்ற மதிப்பை கண்டுள்ளது.
கிரிப்டோ கரன்சியில் மற்றொரு வகையான ஈதர் 19 சதவீதம் சரிந்துள்ளது. கார்டானோ, சோலானா, டோக்காயின் மற்றும் போல்கடோட் ஆகியவை 12 முதல் 14 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது தவிர இன்னும் பிற கிரிப்டோ கரன்சி மதிப்புகளும் சரிந்துள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு கடந்த மாதம் டெர்ரா பிளாக்செயினின் சரிவு மற்றும் செல்சியஸ் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் பிட்காயின் பரிவர்த்தனைகளை நிறுத்தியது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்சியஸ் நிறுவனத்தின் வழியை மற்றொரு நிதி நிறுவனமும் பின்பற்றியுள்ளதாக தெரிகிறது. இது டான் பிட்காயினின் திடீர் சரிவுக்கு பிரதான காரணமாகும்.

கடந்த ஏழு நாட்களாக கிரிப்ட்டோகரன்சி சந்தை சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு முனைகளில் இருந்து மோசமான செய்திகள் வந்ததால் கடந்த வாரத்தில் மட்டும் மொத்த மூலதனத்தில் 400 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

கிரிப்டோகரன்சிக்கு மிகப்பெரிய கடன் வழங்குபவர்களில் ஒன்றான செல்சியஸ் நெட்வொர்க் கடந்த வாரத்தின் தொடக்கத்தில், பணம் திரும்பப் பெறுதல், இடமாற்றங்களை நிறுத்தியதாக அறிவித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பணத்தை அணுக முடியாத சூழல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி அதன் செயல்பாடுகள் தொடர்பாக வதந்திகள் பரவலாக வரத் தொடங்கின. இது முழு சந்தையிலும் கடுமையான பீதியை ஏற்படுத்தியது. அந்நிறுவனத்தி்ன் தலைமை நிர்வாக அதிகாரி குழு இடைவிடாமல் சிக்கல்களைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த வாரத்தின் பிற்பகுதியில் மிகப்பெரிய ஹெட்ஜ் நிதிகளில் ஒன்றான த்ரீ அரோஸ் கேபிட்டலும் சிக்கலை சந்தித்தது. பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியானதால் முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் பயம் ஏற்பட்டது.

பணம் கிடைக்குமா?

மொத்தமாக பிட்காயின் அதன் மதிப்பில் 30% ஐ இழந்தது. ஈதர் கடந்த ஏழு நாட்களில் அதிகம் இழந்த கிரிப்டோகரன்சியாக உள்ளது. 40 சதவீதம் அதன் மதிப்பு குறைந்துள்ளது. ஈதர் சரிவு பெரும்பாலும் செல்சியஸ் மற்றும் அதுதொடர்பான செய்திகளினால் ஏற்பட்டது.

இந்த வீழ்ச்சியை அடுத்து இதில் முதலீடு செய்த பெரும்பாலான முதலீ்ட்டாளர்களும் தங்கள் பணத்தை திரும்ப பெற முயன்றனர். ஆனால் முதலீட்டு நிறுவனங்கள் தரப்பில் உடனடியாக பணத்தை தர முன் வரவில்லை. பொதுவான தகவல்களாக ‘‘மன்னிக்கவும், ஆனால் இப்போது உங்கள் பணத்தை எங்களால் திருப்பித் தர முடியாது. பொறுத்து இருங்கள்’’ என்ற பதிலே வருவதாக கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சி சந்தையின் குறுகிய வரலாற்றில் இது மிக மோசமான வாரமாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.

இதன் மூலம் கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதும் சராசரி முதலீட்டாளருக்கு புரிந்துள்ளது. முதலீடு செய்த பணத்தை இரண்டு நிறுவனங்கள் திரும்பப் பெறுதல்களை முடக்கியுள்ளதால் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் உள்ளது.

"நாங்கள் தொடர்புடைய தரப்பினருடன் தொடர்புகொள்வதில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இதைச் செயல்படுத்துவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்" என்று முதலீட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x