

புதுடெல்லி: இந்த நிதியாண்டின் ஜூன் 15-ம் தேதி வரையிலான காலத்தில் நிகர நேரடி வரி வசூல் 45 சதவீதம் அதிகரித்து ரூ.3.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளதாவது:
நிகர நேரடி வரி வசூல் ரூ.3.39 லட்சம் கோடியில் கார்ப்பரேட் வரி ரூ.1.70 லட்சம் கோடியாகவும், தனிநபர் வருமான வரியாகவும் பாதுகாப்பு பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) உட்பட ரூ.1.67 லட்சம் கோடியாகவும் உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான நேரடி வரி வசூல் புள்ளிவிவரங்கள், ஜூன் 16-ம் தேதி நிலவரப்படி, நிகர வசூல் ரூ.3,39,225 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ. 2,33,651 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு வசூலை விட 45 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான முன்கூட்டிய வசூலான வரி ரூ.1.01 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.75,783 கோடியாக இருந்தது. இதன் மூலம் 33 சதவீத அளவிற்கு வரி வசூல் உயர்ந்துள்ளது.
இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.