

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் இந்தியாவிடமிருந்து மிக அதிக அளவில் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது. மொத்தம் 16.34 லட்சம் டன் அரிசியை சீனா இறக்குமதி செய்துள்ளது. இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அரிசியின் மொத்த அளவில் இது 7.7 சதவீதமாகும். இந்தியா மொத்தம் 212 லட்சம் டன் அரிசியை கடந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது.
சீனா இறக்குமதி செய்த அரிசியில் 97 சதவீதம் அதாவது 15 லட்சம் டன் பாதி உடைத்த அரிசியாகும். பாதி உடைத்த அரிசிக்கான தேவை அதிகரித்ததால் இந்தியாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்தது.
பொதுவாக இத்தகைய உடைத்த அரிசி ஆப்பிரிக்க நாடுகளுக்குத்தான் அதிக அளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும். தற்போது உடைத்த அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது.
ஏற்றுமதி செய்யப்பட்டதில் சாதா ரக அரிசியும், பாசுமதி அரிசியும் அடங்கும். சாதா ரக அரிசி மொத்தம் 172 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உடைக்கப்பட்ட அரிசி நூடுல்ஸ் மற்றும் ஒயின் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
சீனாவில் சோளத்தின் விலை அதிகரித்ததால் மக்கள் அரிசிக்கு மாறியதால் இதற்கான தேவை அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.