Published : 08 Jun 2022 06:20 PM
Last Updated : 08 Jun 2022 06:20 PM

மீண்டும் வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி; எகிறும் வீட்டுக்கடன் தவணை: என்ன செய்யலாம்?

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகால கடனாக பெறும் வீட்டுக்கடனில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கும். தவணைத் தொகை அதிகரிக்கும் நிலையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயரும் வட்டி

ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ (வட்டி) விகித்தை கடந்த மே மாதம் அவசர கூட்டத்துக்கு பின்பு ரிசர்வ் வங்கி 0.40 சதவீதம் உயர்த்தியது. இதனால் ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக ஏற்கெனவே உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் 90 பைசா வட்டி விகிதம் உயர்ந்து விட்டது.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.

ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது வங்கிகளுக்கான நிதிச் செலவு அதிகரிக்கிறது. ரெப்போ விகித உயர்வின் உடனடி தாக்கம் வீட்டுக் கடன் போன்ற சில்லறைக் கடன்களில் தெரியத் தொடங்கும். குறிப்பாக நீண்டகாலம் கட்ட வேண்டிய வீட்டுக்கடன் தொகையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதத்தில் 6.50 சதவிகிதம் குறைந்திருந்த வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஜூன் மாதத்தில் 7.60 சதவிகிதமாக உயரக்கூடும். இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறியதாவது:

ரெப்போ விகிதம் உயர்வால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரும். 36 நாட்களுக்குள் மொத்தமாக 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்து வகையான வீட்டுக் கடன்களும் அதிக வட்டி உயர்வை நோக்கி செல்லும். இது ஏற்கெனவே கடன் வாங்கியவர்கள், புதிய கடன் வாங்குபவர்களையும் பாதிக்கும்.

நீண்டகாலம் கட்ட வேண்டுமா?

வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகித உயர்த்தும். இது கடைசி உயர்வாக இருக்காது. பணவீக்கம் குறையும் வரையிலும் கூட வட்டி உயர்வு இருக்கக்கூடும். ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டுக்குள் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ ரேட் உயர்வால் வீட்டுக் கடன்களின் தவணை காலம் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் 20 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் அந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாக அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தால் அவர் கட்ட வேண்டிய தவணைத் தொகை என்பது மேலும் 24 மாதங்கள் அதிகரிக்கும்.

அதேசமயம் தவணை எண்ணிக்கை அதிகரிக்காமல் தொகையை அதிகரிக்க வாங்கியவர் விரும்பினால் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டி உயர்வால் சராசரியாக ஒரு லட்சத்திற்கு கூடுதலாக ரூ.30 செலுத்த வேண்டும். சராசரியாக மாந்தோறும் செலுத்தும் தொகை சுமார் 4 சதவீதம் அதிகரிக்கும். இந்த விகிதம் என்பது, நபர், வங்கி, வாங்கிய காலம் ஆகியவற்றை பொறுத்து மாறும். இது அனைவருக்கும் ஒரே அளவாக இருக்காது.

கடன் பெறுபவர்கள் தங்கள் வட்டிச் சுமையைக் கட்டுப்படுத்த தவணை உயர்வுக்கு பதிலாக மொத்தத் தொகை செலுத்துதல் போன்ற முன் பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்திக் குறைக்கலாம்.

எப்போதும் கூடுதல் வட்டியின் சுமையை குறைக்க சிறிது தொகையை மாற்றாமல் அல்லது பகுதியளவு முன்கூட்டியே செலுத்துங்கள். ஆனால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காத வகையில் அமைகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x