Published : 03 Jun 2022 09:32 PM
Last Updated : 03 Jun 2022 09:32 PM

மியூச்சுவல் பண்ட் போன்றதா யூலிப் இன்சூரன்ஸ்? - ஒரு தெளிவுப் பார்வை

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இன்று பாலிசியை விற்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக முன்வைக்கப்படுவது யூலிப் பாலிசிகள். குறிப்பிட்ட காலத்துக்கு பணம் செலுத்தினால் போதும், அதிகமான இன்சூரன்ஸ் கவரேஜ், திரும்பக் கிடைக்கும் தொகையும் பெரிய அளவில் இருக்கும் என கூறி விற்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த சில அடிப்படை புரிதல்கள் அவசியமானதாகும்.

யூலிப் என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். முதலீடு மற்றும் அதில் இருந்து வரும் வருமானம் பாலிசியின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. எனினும் பாலிசி எடுத்தவர்கள் இறந்துபோனால் காப்பீட்டுத் தொகை என்பது வழக்கமான ஆயுள் காப்பீடுகளில் வழங்குவது போலவே இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், சில நிறுவனங்களின் காப்பீட்டுத் தொகை என்பது சற்று அதிகமாக இருக்கிறது.

எப்படி செயல்படுகிறது? - மொத்தத்தில் யூலிப் என்பது முதலீடும், காப்பீடும் ஒருங்கிணைந்த ஒரு கலவையான திட்டமாகும். இவை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தற்போது பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. யூலிப் திட்டங்கள் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட்களை போல செயல்படுகின்றன. மியூச்சுவல் பண்ட் போலவே இதிலும் முதலீட்டைக் குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளாகச் செலுத்தலாம்.

மியூச்சுவல் பண்ட் போன்றதா? - இந்த யூனிட்டுகளின் மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பாக (Net Asset Value) பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மொத்த தொகையானது ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், மொத்த முதலீட்டையும் மொத்த யூனிட்டின் எண்ணிக்கையையும் வைத்து கணக்கிடப்படும். திரும்பக் கிடைக்கும் பணத்தின் விகிதம் மொத்த சொத்து மதிப்பை கருத்தில் கொண்டு கணக்கிடப்படும். பாலிசியில் முதலீடு செய்த பணம் எவ்வாறு வளர்ந்தள்ளது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

பார்ப்பதற்கு மியூச்சுவல் பண்ட் போன்ற இது செயல்பட்டாலும் யூலிப் திட்டங்களில் குறைந்தபட்ச பண முடக்கக் காலம் (Lock in period) இருக்கும். இது காப்பீட்டையும் உள்ளடக்கியது என்பது முக்கியமாகும். பங்குகளுடன் இணைந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தில், பங்குகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாக விற்கலாம்.

ஆயுள் காப்பீடு: இந்த யூலிப் திட்டங்களில் ஆயுள் காப்பீடு திட்டம் என்பதால் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். செலுத்தும் பிரிமீயத்தில் ஒரு தொகை காப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது திட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஒட்டுமொத்தமாகவும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கொரு முறை எனத் தவணை முறையிலும் இதில் பிரிமீயம் செலுத்த முடியும். செலுத்தும் தொகையில் குறிப்பிட்ட பணம் முதலீடாக மியூச்சுவல் பண்ட் போன்று திட்டங்களில் முதலீடு செய்யப்படும். குறிப்பிட்ட தொகை இன்சூரன்ஸுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் காப்பீட்டுக்கான அம்சங்களையும் கொண்டிருப்பதால், ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பொதுவாக யூலிப் திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடியவை. காப்பீட்டுத் திட்டங்களைப் போலவே நீண்டகாலம் பிரீமியம் செலுத்தினால், இறுதியில் திட்டம் முதிர்ச்சியடையும் போது சிறப்பான லாபம் கிடைக்கும்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x