

மும்பை: தங்கள் நிறுவனத்தின் முதல் விமான படத்தை பகிர்ந்துள்ளது 'ஆகாசா ஏர்' நிறுவனம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்நிறுவனம்.
கடந்த 2021 டிசம்பர் வாக்கில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் 'ஆகாசா ஏர்' நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பெருமளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற கண்ணோட்டத்தில் ஆகாசா தொடங்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த கட்டணத்தில் வரும் 2023, மார்ச் மாதத்திற்குள் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தங்களது முதல் விமானத்தை வரும் ஜூலை வாக்கில் இயக்க முடிவு செய்துள்ளது ஆகாசா. அதற்கு தயாராகும் வகையில் இப்போது அந்த விமானத்தின் படத்தை முதல் முறையாக பகிர்ந்துள்ளது.
இதற்காக போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த விமானம் ஆகாசா ஏர் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. QP என்ற ஏர்லைன் கோட் இதற்கு கிடைத்துள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு 6E, ஏர் இந்தியாவுக்கு AI போலவே இந்த கோட்.