

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்பதுடன், சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம், உர மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது.
சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்: மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு சமையல் கேஸ் ஒன்றுக்கு ரூ.200 ரூபாய் மானியமாக வழங்கப்படும். (ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்.)
சுங்க வரி குறைப்பு: இந்தியாவின் இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
சிமென்ட்: சில உருக்கு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும். மேலும், சிமென்ட் விலையை குறைக்கவும், சிமென்ட் கிடைப்பதை உறுதி செய்யவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உர மானியம்:இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1.05 லட்சம் கோடியுடன் கூடுதலாக உர மானியமாக ரூ.1.10 கோடியுடன் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ''மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.