Published : 13 May 2022 07:24 AM
Last Updated : 13 May 2022 07:24 AM

மும்பை பங்குச் சந்தையில் 1,158 புள்ளிகள் சரிவு: ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்

கோப்பு படம்

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண் 1,158 புள்ளிகள் சரிந்து 52,930-ல் நிலை பெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி குறியீட்டெண் 359 புள்ளிகள் சரிந்து 15,850 புள்ளிகளானது. பங்குகளின் சந்தை மதிப்பு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் தொடர்ந்து ஐந்து தினங்களாக பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி, உலோகம், ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு, எப்எம்சிஜி, மின்சாரம், பார்மா, சில்லரை வர்த்தக நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.

ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

நேற்று காலையில் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்த நிலையில், ஏப்ரல் மாத பணவீக்க விவரம் நேற்று மாலை வெளியானது. இதன்படி மார்ச் மாதத்தில் 6.95% ஆக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆகும். தொடர்ந்து 4 மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் நேற்று கடுமையாக சரிந்தது. ஒரே நாளில் ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ.77.59 என்ற அளவில் வர்த்தகமானது. நேற்று முன்தினம் இது ரூ.77.25 என்ற அளவில் இருந்தது.

பங்குச் சந்தையிலிருந்து அதிக அளவில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (எப்பிஐ) வெளியேறியது, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் டாலரின் மதிப்பு உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x