Last Updated : 08 May, 2022 04:00 AM

 

Published : 08 May 2022 04:00 AM
Last Updated : 08 May 2022 04:00 AM

‘தமிழகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாம்பழம் விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு’

சேலம் காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாம்பழ மண்டிக்கு வந்துள்ள மாம் பழங்களை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

தமிழகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாம்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 50 முதல் 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என சேலம் மேங்கோ ஃபுரூட் அசோசியேஷன் தலைவர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சேலம் மாம்பழம் பிரசித்துபெற்றது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவு மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் சேலம்- பெங்களூரா,அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் குண்டு, பங்கனப்பள்ளி, நடுசாலை,செந்தூரா உள்ளிட்ட பல ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கிய நிலையில், மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சேலம் மேங்கோ ஃபுரூட் அசோசியேஷன் தலைவர் ஜெயபால் கூறியதாவது:

ஆண்டு தோறும் மார்ச் மாதம் மாம்பழம் சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை விற்பனை செய்யப்படும். மா மரங்களில் அக்டோபர் முதல் ஜனவரி வரை பூ வைக்கும் பருவம். கடந்த ஆண்டு இறுதியிலும், இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்திலும் மா மரங்களில் பூ வைக்கும் நேரத்தில் மழை பெய்ததால், மா பிடிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக சீசனில் மார்க்கெட்டுக்கு 50 டன் முதல் 100 டன் வரை மாம்பழம் விற்பனைக்கு வரும். தற்போது, தினமும் 10 முதல் 15 டன் வரையே விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாம்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாம்பழம் விலை ரகத்துக்கு ஏற்றவாறு 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மல்கோவா, இமாம்பசந்த், சேலம் -பெங்களூரா மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரையும், நடுசாலை, நீலம் மாம்பழம் ரூ.50 முதல் ரூ.100 வரையும், அல்போன்சா ரூ.50 முதல் ரூ.150 வரையும், செந்தூரா ரூ.30 முதல் ரூ.50 வரையும், நடுசாலை ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, மேட்டூர், சோரகை, நங்கவள்ளி, சங்ககிரி, வைகுந்தம், பேளூர், தும்பல், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து மாம்பழங்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சேலத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்பவர்கள் மாம்பழங்களை வாங்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x