Published : 30 Apr 2022 01:19 PM
Last Updated : 30 Apr 2022 01:19 PM

கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? - வருகிறது புதிய விதிமுறைகள்: முழுமையான விவரம்

மும்பை: கிரெடிட் கார்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில் அதனை பயன்படுத்துபவர்களின் நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இதன் மூலம் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடுகள் வருகிறது.

பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதனை பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. தவறான பயன்பாட்டுக்கு வெளிப்படையற்ற முறையில் வட்டி வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருள்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு வட்டி கிடையாது. அதேநேரத்தில், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 45% வரை வட்டி வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இதற்கான விதிமுறைகள் வெளிப்படையாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்தநிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் குறித்த புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1 முதல் இது அமலுக்கு வருகிறது.

இதன்படி வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமல் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதோ அல்லது ஏற்கெனவே வைத்திருக்கும் கிரெடிட் கார்டினை மேம்படுத்தி வழங்குவதோ செய்யக்கூடாது என கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதையும் மீறி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செயல்பட்டால் லாபத்தின் இருமடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகள் வங்கிகள், பேமெண்ட் பேங்குகள், கோ ஆப்ரேட்டிவ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிப்படை தன்மை

கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள்/ வங்கிகள் பில்கள்/ மின்னஞ்சலில் அறிக்கைகளை அனுப்புவதில் தாமதம் செய்யக்கூடாது. வட்டி வசூலிக்கத் தொடங்குவதற்கு முன் வாடிக்கையாளர் பணம் செலுத்துவதற்கு போதுமான நாட்கள் (குறைந்தது 15 நாட்கள்) இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

தாமதமான பில்லிங் குறித்த அடிக்கடி வரும் புகார்களைத் தவிர்க்க, கார்டு வழங்கும் நிறுவனம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் வெளிப்படையான ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். இணையம் வழியாக, மொபைல் பேங்கிங் மூலம் பில்கள் மற்றும் கணக்குகளின் அறிக்கைகளை வழங்கலாம்.

கார்டு வைத்திருப்பவர்கள் பில்லிங் குறித்த அறிக்கையை பெறுவதை உறுதிப்படுத்த இணையத்தில் பொறியை வைத்து உறுதி செய்ய வேண்டும்.

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தவறான பில்களை அட்டைதாரர்களுக்கு வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கார்டுதாரர் ஏதேனும் விளக்கம் கோரினால் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். புகார் செய்யப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் ஆவண ஆதாரங்கள் கிரெடிட் கார்டு வாங்கிய நபருக்கு வழங்கப்பட வேண்டும்.

பில்லிங் சுழற்சி முறை

சர்ச்சை தீர்க்கப்படும் வரை கார்டுதாரர் மோசடி செய்ததாகவோ, சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதோ கூடாது. கிரெடிட் கார்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் நிலையான பில்லிங் சுழற்சி முறையை பின்பற்றுவதில்லை. நெகிழ்வுத்தன்மை கொண்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் வசதிக்கேற்ப கிரெடிட் கார்டின் பில்லிங் சுழற்சியை மாற்றுவதற்கான ஒரு முறை விருப்ப தேர்வு வழங்கப்பட வேண்டும்.

கடன் வரம்பை தாண்டி திரும்ப பெறுதல், தவற விடுவது, தவறான பரிமாற்றம் செய்யும்போது அல்லது பணம் செலுத்தும் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மூலம் ஏதேனும் கிரெடிட் தொகையானது கார்டுதாரரால் செலுத்தப்படாமல் இருந்தால் அது கட்டணத்தொகைக்கு நிகராக சரி செய்யப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும்.

கடன் வரம்பை தாண்டி திருப்ப பெறுதல், தவற விடுவது, தவறான பரிமாற்றம் செய்யும்போது கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கடன் வரம்பின் ஒரு சதவீதம் அல்லது ரூ.5,000 இவற்றில் எது குறைவானதோ அதனை வசூலிக்கின்றன. ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருப்ப்பவரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெற வேண்டும்.

கடன் வரம்பு; அபராதம்

அட்டைதாரரால் ஏற்கெனவே செலுத்தப்பட்ட கடன் வரம்பு, கடன் பரிவர்த்தனை செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள் மின்னஞ்சல் அல்லது எஸ்எம்எஸ் மூலம் ஒப்புதல் பெறப்படும். கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் கார்டுதாரரிடமிருந்து ஒப்புதல்/பதில் பெறவில்லை என்றால், கடன் பரிவர்த்தனையை அட்டைதாரரின் வங்கிக் கணக்கில் மாற்ற வேண்டும்.

கட்-ஆஃப் இருந்தபோதிலும், கார்டு கணக்கில் நிலுவையில் உள்ள கிரெடிட் தொகையை தனது வங்கிக் கணக்கில் திருப்பித் செலுத்த அனுமதிக்குமாறு கார்டுதாரர் கோரிக்கை விடுக்கலாம். அத்தகைய கோரிக்கை வரப்பெற்ற மூன்று வேலை நாட்களுக்குள் கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் அதை செய்து தர வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x