Published : 27 Apr 2022 02:34 PM
Last Updated : 27 Apr 2022 02:34 PM

ஆசிய பசிபிக் பிராந்திய நகரங்களில் அலுவலக வாடகை மதிப்பீடு: பெங்களூரு முன்னேற்றம்

புது டெல்லி: ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான அலுவலக வாடகை மதிப்பில் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான முதல் காலாண்டு தகவலாகும். இது அபாரமான வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நைட் ஃபிராங்க் கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிரைம் அலுவலக வாடகை தொடர்பான காலாண்டு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மொத்தம் 23 நகரங்கள் இதற்காக கண்காணிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 2022 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 5.8 சதவீதம் பெங்களுருவில் வாடகை மதிப்பு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 நகரங்களில் 21 நகரங்கள் நிலையான வளர்ச்சியை எட்டி உள்ளதாகவும். இதற்குக் காரணம் சர்வதேச அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் ஸ்திரத்தன்மை எனவும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பெங்களுரு மற்றும் டெல்லி - தேசிய தலைநகர் வலயத்தில் (NCR) குத்தகை சார்ந்த நடவடிக்கைகள் இந்த காலாண்டில் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அளவில் அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அதிக வாடகை வசூலிக்கும் பகுதியாக ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி உள்ளது. அங்கு ஒரு சதுர அடிக்கான ஓராண்டு வாடகையாக 186 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்யப்படுகிறது. இதில் டெல்லி - என்சிஆர் பகுதி ஒன்பதாவது இடத்திலும் (60 அமெரிக்க டாலர்கள்), பதினைந்தாவது இடத்தில் மும்பை (50.9 அமெரிக்க டாலர்கள்), 21-வது இடத்தில் பெங்களூரு (26.7 அமெரிக்க டாலர்கள்) நகரங்கள் உள்ளன.

பெங்களூருவை இந்தியாவின் சிலிகான் வேலி என அழைப்பது உண்டு. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதே இதற்குக் காரணம். அதனால் இந்த நகரில் அலுவலக குத்தகைக்கு அதிக டிமாண்ட் இருப்பது வழக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x