Published : 25 Apr 2022 07:25 PM
Last Updated : 25 Apr 2022 07:25 PM

வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரும் பணக்காரர் ஆனார் அதானி

கௌதம் அதானி

புது டெல்லி: உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி. இதன் மூலம் வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார் அவர்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருபவர் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. 59 வயதான அவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அண்மையில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் அதானி இணைந்தார். இந்நிலையில், தற்போது பெர்க்சயர் ஹாதவே (Berkshire Hathaway) தலைமைச் செயல் அதிகாரி வாரன் பஃபெட்டை முந்தியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்ஸ் பட்டியலின்படி 123.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார் அதானி. அதன் மூலம் 121.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ள வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். வாரன் பஃபெட் நிறுவனமும் அமெரிக்க பங்குச் சந்தையில் தனது பங்குகளில் சரிவை கண்டுள்ளது இதற்கு காரணம் என தெரிகிறது.

பில் கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x