Published : 18 Apr 2022 06:24 PM
Last Updated : 18 Apr 2022 06:24 PM

புதிய இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு: திட்டத்தை மாற்றும் ஐடி நிறுவனங்கள் 

மும்பை: உலகை உலுக்கி வரும் ஊழியர்கள் ராஜினாமா ஐடி நிறுவனங்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. அதிகமான ஊழியர்களை பணிக்கு சேர்த்தும் தேவை இருப்பதால் படிப்பு முடித்த புதிய இளைஞர்களை அதிகஅளவில் பணிக்கு அமர்த்த ஐடி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. ஊழியர்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டன.

நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு குறைந்தது. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.

இப்போது புதிய மாற்றமாக கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்தனர். ஊழியர்கள் பெருமளவு ராஜினாமா செய்யும் போக்கு இந்த ஆண்டும் தொடர்கிறது. குறிப்பாக ஐடி துறையில் ஊழியர்கள் ராஜினாமா செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

அதேசமயம் ஐடி நிறுவனங்களுக்கு உலக அளவிலான தொழில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. குறைந்த கட்டணத்தில் தகவல் தொழில்நுட்ப திட்டங்களை செய்து வருவதால் இதுபோன்ற வாய்ப்புகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. ஆனால் புதிய பணிகளை முடிப்பதற்கு போதிய ஊழியர்கள் இல்லாத சூழல் ஐடி நிறுவனங்களில் தற்போது நிலவுகிறது.

இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருகிறது. ஊழியர்களை ஈர்க்க சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகமான லாபம் ஈட்டி வரும் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிகமான சலுகைளை வழங்கி வருகிறது. ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட பரிசுகளும் ஐடி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இருப்பினும் தொடர்ந்து ஊழியர்கள் வேலையை விட்டு செல்லும் போக்கு தொடர்கிறது. அதேசமயம் அதிகமான பணி திட்டங்கள் தொடர்ந்து ஐடி நிறுவனங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தொடங்கி பல நிறுவனங்களும் ஊழியர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த மார்ச் 31-ம் தேதி முடிந்த காலாண்டில் 35,209 ஊழியர்களை நியமித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கமாக ஆண்டுக்கு 40 ஆயிரம் பேரை சேர்க்கும் நிலையில் கூடுதலாக ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,195 ஆக உள்ளது. இருப்பினும் ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே இன்போசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 85,000 பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிலும் பணியாளர்கள் நியமனம் இந்த அளவில் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் ஆவர்.

அதேசமயம் தகவல் தொழில்நுட்ப திட்டங்கள் தொடர்ந்து அதிகமாக வரும் நிலையில் அதனை சமாளிக்க கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதனால் இந்த ஆண்டும் புதிய இளைஞர்களை அதிகமாக சேர்க்க ஐடி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த ஆண்டை விடவும் சுமார் 30 சதவீதம் அதிகமாக புதியவர்களை, கல்லூரி படிப்பு முடித்தவர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக ஆய்வு நிறுவனமான டீம்லீஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் முடித்து துறைக்கு புதிதாக வரும் மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தில் பணியமர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ப படிப்பு முடித்த இளைஞர்களை பணியமர்த்துவதற்காக ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x