தேசியப் பங்குச் சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் ஐ.டி ரெய்டு
மும்பை: முகம் தெரியாத இமயமலை சாமியாரின் வழிகாட்டுதலின்படி பங்குச்சந்தையை நடத்தியதாக செபியால் குற்றம்சாட்டப்பட்ட தேசியப் பங்குச் சந்தை முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் உள்ள அவரது வீடு, அலுவலகம் அவருக்குத் தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சித்ரா ராமகிருஷ்ணன்? - 2013 முதல் 2016 ஆம் ஆண்டுவரை தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், தனது பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, தலைமை மூலோபாய அதிகாரியாக, அந்தப் பொறுப்புக்கான முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமித்து அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் மற்றும் பல சலுகைகளை வழங்கியுள்ளார்.
இந்த முடிவுகள் அனைத்தையும் முகம் தெரியாத இமயமலை சாமியாரின் ஆலோசனையின் பெயரிலே சித்ரா எடுத்துள்ளதாக செபி தெரிவித்தது. அந்த சாமியாரின் பெயர் சிரோன் மணி என்றும், அந்த சாமியாரை இதுவரை நேரில் பார்த்ததில்லை என்றும் மின்னஞ்சல் வழியாகவே அவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் சித்ரா தெரிவித்துள்ளதாக செபி குறிபிட்டுள்ளது.
என்எஸ்இ-யின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள் என பலவற்றையும் அவர் அந்த சாமியாருடன் பகிந்துள்ளதாகவும் இதற்காக அந்தச் சாமியாருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் செபி தெரிவித்தது.
இந்நிலையில், விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது. இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்தது.
சாமியாரா? ஆனந்த் சுப்பிரமணியனா? - ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவை தன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
