

சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.376 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. சற்றே போர் பதற்றம் தணிந்தாலும் கூட முழுமையாக அச்சம் அகலவில்லை.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.47 உயர்ந்து ரூ.4710- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ. 37680-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 40608-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து ரூ 68.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 68,000 ஆக உள்ளது.