Published : 08 Feb 2022 06:40 PM
Last Updated : 08 Feb 2022 06:40 PM

தாவர இறைச்சி நிறுவனத்தில் முதலீடு செய்த விராட் - அனுஷ்கா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து பிரபல தாவர இறைச்சி நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ளார்.

சைவ இறைச்சி (plant-based meat) என அழைக்கப்படும் தாவரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இறைச்சி மாதிரியான உணவுகள்தான் இன்று மார்டன் உலகில் பிரபலமாகி வரும் ஓர் உணவு வகை. சர்வதேச அளவில் கவனம் பெற்றுவரும் இந்த தாவர இறைச்சி தொழிலில் பல பிரபலங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். கடந்த வருடம் பாலிவுட் செலிபிரிட்டி தம்பதிகளான ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் இமேஜின் மீட்ஸ் என்ற தாவர இறைச்சி நிறுவனத்தில் முதலீடுகளை செய்தனர். இவர்கள் வரிசையில் தற்போது லேட்டஸ்ட் வரவுதான் மற்றொரு நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா.

இவர்கள் இருவரும் மும்பையைச் சார்ந்த தாவர இறைச்சி சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘Blue Tribe Foods’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அனுஷ்கா, விராட் இருவருமே சைவ பிரியர்கள். தங்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு கடந்த சில வருடங்களாக இவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து, இறைச்சிகள் இல்லாத வாழ்க்கை முறையை கடைபிடிப்பதாக பல முறை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தான் ‘Blue Tribe Foods’ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதுடன், அந்த நிறுவனத்தின் விளம்பர வீடியோவில், "எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பூமியை வாழ சிறந்த இடமாக மாற்றுவது என்பது பற்றி விராட்டும் நானும் தொடர்ந்து பேசிக்கொள்வோம். எங்கள் வாழ்க்கையின் அம்சங்களில் ஒன்று தாவர உணவு வகைகளை முழுவதும் ஏற்றுக்கொண்டது. எந்த இறைச்சியையும் உட்கொள்ள மாட்டோம். நாங்கள் இருவருமே உணவுப் பிரியர்கள். அதனால் சில நேரங்களில் இறைச்சி வகை உணவுகளை மிஸ் செய்வதும் உண்டு.

ப்ளூ ட்ரைப் உடனான ஒத்துழைப்பு, தாவர அடிப்படையிலான உணவுக்கு மாறுவதன் மூலம் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க முடியும். அதிகமான மக்கள் அதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்மூலம் இந்த பூமியின் மேம்பட்ட வாழ்க்கைக்கும் உதவுங்கள்" என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூ ட்ரைப் ஃபுட்ஸ், சந்தீப் சிங் மற்றும் நிக்கி அரோரா சிங் என்ற இருவரால் தொடங்கப்பட்டது. இது இந்திய சந்தையில் இறைச்சி அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு மாற்றாக பட்டாணி, சோயாபீன், பருப்பு, தானியங்கள் மற்றும் பிற புரதம் நிறைந்த பொருட்களை கொண்டு தாவர இறைச்சி உணவுகளை தயாரித்துவருகிறது. தாவர அடிப்படையிலான சிக்கன் மோமோஸ், நகட்ஸ் ஆகியவை இந்த நிறுவனத்தின் பிரபலமான உணவுகளாக அறியப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x