Published : 27 Jan 2022 11:15 AM
Last Updated : 27 Jan 2022 11:15 AM

பங்குச்சந்தைகள் கடும் சரிவு: ஒரே வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சென்செக்ஸ் 1,011 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.

உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.

இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.

இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. தொடர்ந்து இந்த வாரமும் பெரும் சரிவை சந்தித்தன.

இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இன்றும் நீடித்தது.

காலை 9:26 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1,011 புள்ளிகள் அல்லது 1.75 சதவீதம் சரிந்து 56,847 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 180 புள்ளிகள் அல்லது 1.62 சதவீதம் சரிந்து 16,998 ஆக இருந்தது.

உலகளாவியஅளவில் பங்குச் சந்தைகள் சரிந்ததால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடுமையாக சரிந்த்து வருகின்றன. ஆசிய பங்குச்சந்தைகளில் பங்குகள் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவை எதிர்கொண்டன.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான கணிப்பால் டாலர் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியால் உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. மேலும், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் குறித்த கவலையாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை விற்பனை செய்வதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x