Published : 24 Jan 2022 07:15 PM
Last Updated : 24 Jan 2022 07:15 PM

5 ஆண்டுகளில் 53% சரிந்த இந்திய ஏழைகளின் வருமானம்: புதிய சர்வே முடிவுகள்

பிரதிநித்துவப் படம்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் தங்கள் வருமானத்தில் பாதியை இழந்துள்ளனர் என்று புதிய சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.

ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-16-ல் இருந்த நிலையை விட அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் அதாவது, 2020-21-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக 53% சரிந்துள்ளது. இதே ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 20% பணக்காரர்கள் தங்களின் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39% வளர்ச்சி கண்டுள்ளனர் என்பது இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் (PRICE) என்ற மும்பையைத் தளமாகக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் - அக்டோபர் 2021-க்கு இடையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயின் முதல் சுற்றில் 200,000 குடும்பங்களிடம், இரண்டாவது சுற்றில் 42,000 குடும்பங்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்கள் கிட்டத்தட்ட 100 மாவட்டங்களில் உள்ள 120 நகரங்கள் மற்றும் 800 கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வருமானத்தின் அடிப்படையில் மக்கள்தொகையை ஐந்து வகைகளாகப் பிரித்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிக ஏழ்மையான 20 சதவீத குடும்பங்கள் வருமானம் 53 சதவீத சரிந்துள்ளது. மேலும் Lower middle class எனப்படும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரின் குடும்ப வருமானம் இதே காலகட்டத்தில் 39 சதவீத சரிந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் (middle class) ஆண்டு வருமானம் 9 சதவீதம் குறைந்துள்ளது.

இருப்பினும், Upper middle class எனப்படும் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார குடும்பங்களின் வருமானம் முறையே 7 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற அளவில் இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலுக்கு முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் 20% பணக்கார குடும்பங்கள் அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.

1995 ஆண்டு வாக்கில் மொத்த குடும்ப வருமானத்தில் 50.2 சதவீதத்தை பணக்காரர்களான 20 சதவீதத்தினர் பெற்றிருந்தனர். அதுவே 2021-ல் 56.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சர்வே வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு நேர்மாறாக, 20 சதவீத ஏழை மக்களின் மொத்த குடும்ப வருமானத்தின் பங்கு 5.9 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், கரோனா காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு காரணமாக இந்த 20 சதவீத ஏழை மக்கள் 2016-ல் வருமானம் ஈட்டியதில் பாதி அளவு மட்டுமே தற்போது வருமானம் ஈட்டியுள்ளனர் என்றும் அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களில் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையில் உயர்வு: 2016-ம் ஆண்டில் 20 சதவீத ஏழைகளில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்ந்துள்ளனர். 2021-ல் இந்த எண்ணிக்கை 70 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் நகர்ப்புறங்களில் வசித்து வந்த ஏழை மக்களின் எண்ணிக்கை 2016-ல் 10 சதவீதம் என்ற அளவில் இருந்து 2021-ல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள சர்வே நடத்திய PRICE குழுவின் சிஇஓ ராஜேஷ் சுக்லா, "அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், வீட்டுப் பணியாளர்கள் போன்றோர் கரோனா தொற்றுநோய் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த சர்வே வெளிப்படுத்துகிறது. நகர்ப்புற ஏழை மக்களின் ஏழ்மை நிலை அதிகரிப்பு என்பது அந்த முழு பிரிவினரின் குடும்ப வருமானத்தையும் கடுமையாக குறைத்துள்ளது. கிராமப்புறங்களில், கீழ்த்தட்டு நடுத்தர மக்கள் (Lower middle class) இருப்பது இந்த சர்வே எடுக்கும்போது தெரியவந்தது.

அதேபோல் நடுத்தர வர்க்கத்தில் குடும்பத்தின் பிழைப்பு ஆதாரமாக இருக்கும் நபர்கள் கல்வியறிவற்றவர்களோ அல்லது ஆரம்பப் பள்ளிப் படிப்பை பயின்றவர்களாக இருக்கிறார்கள். பணக்காரர்களில் பெரும்பாலானோர் 60 சதவீதம் பேர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும், 40 சதவீதம் பேர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர் என்பதும் சர்வே மூலமாக வெளிப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x