Published : 22 Jan 2022 12:20 PM
Last Updated : 22 Jan 2022 12:20 PM
புதுடெல்லி: வருமான வரி விதிப்பு முறையை அரசு கைவிட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார். இத்தகைய உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் பழைய நிலைக்கு மீண்டு வரும் வரையிலாவது வருமான வரி விதிப்பை அரசு கைவிட வேண்டும். எதிர்வரும் பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் வெளியிட வேண்டும். இதன்படி ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிப்பு கைவிடப்படுவதான அறிவிப்பை அவர் வெளியிடலாம். குறைந்தபட்சம் பொருளாதாரம் பழைய நிலைக்கு மீண்டு வரும் வரையிலாவது இதை அமல்படுத்தலாம். பழைய நிலையை எட்டியபிறகு இதே முறையை அதாவது வருமான வரி விதிப்பில்லாத நிலையை தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம் அதிகரித்துவரும் சூழலில் பல லட்சம் நடுத்தர குடும்பத்தினர், குறிப்பாக வருமான வரி செலுத்தும் மாதாந்திர சம்பளதாரர்களுக்கு சுப்ரமணியன் சுவாமியின் இந்த பரிந்துரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வருமான வரிக்குப் பதிலாக வரி வசூலைத் திரட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. பாஜக அரசு பதவியேற்ற போது வருமான வரி மூலமான வருவாய் ரூ. 4 லட்சம் கோடி. இது அரசின் செலவினங்களோடு ஒப்பிடுகையில் ஒரு பெரிய தொகை அல்ல. இப்போது வரி வருமானம் ரூ. 8 லட்சம் கோடி முதல் ரூ. 9 லட்சம் கோடி வரைதான் உள்ளது. பாஜக பதவியேற்றபோது மாற்று வழியாக 2 ஜி லைசென்ஸ் ஏலம் விடுவதன் மூலம் ரூ. 4 லட்சம் கோடியை திரட்டமுடியும் என்று பரிந்துரைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT