Published : 07 Jan 2022 04:11 PM
Last Updated : 07 Jan 2022 04:11 PM

இலங்கையில் சீனாவுக்கு ‘செக்’- கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டியை குத்தகைக்கு எடுத்தது இந்தியா

கொழும்பு: இலங்கையில் சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக அந்நாட்டில் ஆங்கிலேயேர் ஆட்சிக்கால கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டியை குத்தகைக்கு எடுத்து வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் ஒப்பநத்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது இலங்கையில் உள்ள திருகோணமலை துறைமுகம் அருகே கச்சா எண்ணெயை சேமித்து வைக்கும் வசதி கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகு அதனை இலங்கை பயன்படுத்தி வந்தபோதிலும் சரியான பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 99 கச்சா எண்ணெய் சேமித்து வைக்கும் தொட்டிகளை உள்ள 827 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து 50 வருடங்களுக்கு மூன்று நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

கடந்த வாரம் இலங்கை அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியது. இதற்கு ஏற்ப 14 கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும், 24 கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. எஞ்சிய 61 கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை கூட்டிணைந்த நிறுவனத்திற்கும் கூட்டாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க புதிய நிறுவனம் ஒன்று தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் என்ற பெயரில் இதற்காக தனியார் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் 51 வீத பங்குகள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் 49 வீத பங்குகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதாக அமையும் என கருதப்படுகிறது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கை பயணம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்துக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x