

மும்பை: இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்று எதிரொலி மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது.
இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்திஙல் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. இதுமட்டுமின்றி தொடர்ச்சியான பணவீக்கம் பற்றிய கவலைகள் காரணமாக அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாலும் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்துக்கு பின்பு ஆசிய பங்குகளும் சரிவை சந்தித்தன. இதனால் மும்பை பங்குச்சந்தையில் காலை 10:46 மணி நிலவரப்படி, 30-பங்குகளின் பிஎஸ்இ சென்செக்ஸ் பேக் 917 புள்ளிகள் அல்லது 1.52 சதவீதம் குறைந்து 59,306 ஆக சரிந்தது. என்எஸ்இ நிஃப்டி 254 புள்ளிகள் அல்லது 1.42 சதவீதம் குறைந்து 17,671 ஆகவும் இருந்தது.
ஐடி, மின்சாரம் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் சரிவை கண்டன. இதுபோலவே அதானி போர்ட், எச்டிஎப்சி, ஜாஸ்வா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.