Published : 04 Jan 2022 05:51 PM
Last Updated : 04 Jan 2022 05:51 PM

ஓஎன்ஜிசியின் முதல் பெண் தலைவர் அல்கா மிட்டல்

புதுடெல்லி: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அல்கா மிட்டல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்கும் முதல் பெண்மணி ஆவார்.

ஓஎன்ஜிசியின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி ஷங்கர் மார்ச் 31, 2021 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார், அவருக்குப் பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் பிறகு இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனரான அல்கா மிட்டல், நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு அமைச்சரவையின் நியமனக் குழு வழங்கியுள்ளது.

ஜனவரி 1, 2022 முதல் ஆறு மாத காலத்திற்கு, அல்லது பதவிக்கு வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, அல்லது மறு உத்தரவு வரும் வரை, எது விரைவில் முடியுமோ அதுவரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்மணி எனும் சிறப்பை பெறுகிறார்.

அல்கா மிட்டல் யார்?

அல்கா மிட்டல் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குனராக 2018- ம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றார். இதன் மூலம், ஓஎன்ஜிசி நிறுவன இயக்குனர் குழுவில் முழு நேர இயக்குனராக பொறுப்பு வகிக்கும் முதல் பெண் எனும் சிறப்பையும் அவர் பெற்றார்.
பொருளாதார பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவரான அக்லா மிட்டல் எம்பிஏ பெற்ற பிறகு 1985-ல் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளராக சேர்ந்தார்.

தலைமை திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது 5,000-க்கும் மேற்பட்ட பயிறசியாளர்களை பயன்படுத்தி, தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

அல்கா மிட்டல்

கடந்த ஆகஸ்ட் 2015 முதல் ஓஎன்ஜிசி-யின் மங்களூரு பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் குழுமத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு, தொடர்ந்து அவர் நிறுவனத்தில் முன்னேறி மனிதவள இயக்குனராக பொறுப்பேற்றார். ஓஎன்ஜிசி-யின் பல்வேறு பணிகளை செய்த அல்கா, தற்போது அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளார்.

இரண்டு பெண்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகின்றனர். இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அல்கா மிட்டல் ஆவார், அதேசமயம் வர்த்திகா சுக்லா பொறியியல் ஆலோசனை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x