Published : 01 Jan 2022 04:54 PM
Last Updated : 01 Jan 2022 04:54 PM

கிரிப்டோகரன்சி இடைதரகு நிறுவனங்கள் ரூ.70 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: நாடு முழுவதும் அதிரடி சோதனை

பிரதிநிதித்துவப் படம்

மும்பை: கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் இடைத்தரகர்களாக செயல்படும் நிறுவனங்களில் பெருமளவு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சோதனையின்போது சுமார் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியும் கவலை தெரிவித்து வந்தன.

இப்போது பிட்காயின் ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பல கட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க ஆலோசனை மேற்கொண்டது.

கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யவும், இதற்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படவில்லை. மாறாக பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையி் கிரிப்டோகரன்சி சேவை வழங்குநர்களான வாஸிர்எக்ஸ் மூலம் ஜிஎஸ்டியின் பெரும் வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் நாட்டில் செயல்படும் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கிரிப்டோகரன்சி சேவை வழங்குநர்களின் சுமார் அரை டஜன் அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, இதில் ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது
கிரிப்டோ வாலட் மற்றும் பரிமாற்றம் என்பது வணிகர்களும் நுகர்வோரும் பிட்காயின், எத்தேரியம், சிற்றலை போன்ற டிஜிட்டல் சொத்துக்களுடன் பரிவர்த்தனை செய்யக்கூடிய தளங்களாகும்.

ஆதாரங்களின்படி, மும்பை சிஜிஎஸ்டி மற்றும் டிஜிஜிஐ மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீதான வரி ஏய்ப்பு தொடர்பான சோதனையின்போது சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிரிப்ட்டோகரன்சி சேவை வழங்கும் பல்வேறு நிறுவனங்களில் விசாரணை நடைபெற்ற வருகிறது.

இதுகுறித்து ஜிஎஸ்டி வட்டாரங்கள் கூறுகையில், "இந்த நிறுவனங்கள் கிரிப்டோ நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இடைத்தரகர் சேவைகளை வழங்குகிறார்கள். இந்த சேவைகள் ஜிஎஸ்டி வரி விகிதமான 18 சதவீதத்தின் கீழ் வருகிறது. ஆனால் அவை அனைத்தும் ஏய்ப்பு செய்து வருகின்றன.

இந்த சேவை வழங்குநர்கள் பிட்காயின்களை மாற்றுவதில் ஈடுபடுவதற்கான வசதிக்காக கமிஷன் தொகை வசூலித்தனர், ஆனால் ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை. இந்த பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது ஜிஎஸ்டி செலுத்தாததை உறுதிப்படுத்துகிறது.

அவர்கள் ஜிஎஸ்டியாக ரூ.30 கோடி மற்றும் ரூ.40 கோடியை செலுத்தியுள்ளனர். ஆனால் பெரும் தொகை ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஜிஎஸ்டி சட்டங்களை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். சோதனையின்போது கிரிப்ட்டோகரன்சி சேவை வழங்குநர்களிடமிருந்து 70 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மும்பையில் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் வாஸிர்எக்ஸ் லிருந்து ரூ 40.5 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பைக் கண்டறிந்தது மற்றும் ஜிஎஸ்டி ஏய்ப்பு, வட்டி மற்றும் அபராதம் தொடர்பான ரொக்கமாக ரூ.49.20 கோடி மீட்கப்பட்டது.’’ எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x