Published : 31 Dec 2021 04:35 PM
Last Updated : 31 Dec 2021 04:35 PM

ஜவுளிக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு இப்போது இல்லை: கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கு முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஜிஎஸ்டி வரி முறையில் 12 சதவீத பிரிவையும் 18 சதவீத பிரிவையும் ஒன்றாக இணைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. அதேபோல, சில பொருட்களுக்கான வரிகளைக் குறைக்கவும் கோரிக்கை உள்ளது. இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை செய்து வருகிறது. ஜவுளிகளுக்கான வரி உயர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜனவரி 1 முதல் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமானது 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கலாம் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஜனவரி 1க்கு மேல் துணிகள் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ஜவுளித்துறையினருக்கு நிம்மதி அளிக்கும் விதமாக இந்த முடிவு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்து வரும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x