

சென்னை: சென்னை சிட்டி கால்பந்து கிளப்பும் (சிசிஎப்சி) பெல்பிரிக்ஸ் பிடி நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் தளத்தை செயல்படுத்தும் கேபிஆர் இன்போ சொல்யூஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்தியாவின் பல கோடி மதிப்புள்ள விளையாட்டு உபகரண சந்தையின் வர்த்தக வாய்ப்பை என்எப்டி மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
என்எப்டி என்பது பிரத்யேகமான பிறருக்கு மாற்ற இயலாத டிஜிட்டல் பத்திரமாகும். இது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உருவாக்கும் வகையில் டிஜிட்டல் தகவல் ஆவணமாகும். இது புகைப்படம், வீடியோ பதிவாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் குறித்து சென்னை சிட்டி கால்பந்து கிளப்பின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் ரமேஷ் கூறும்போது: ``கால்பந்து விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் விளையாட்டு வீரர்களை என்எப்டி எனப்படும் பத்திரமாக மாற்றப்படும். இதனால் சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் மீது முதலீடு செய்து கிளப்பின் உறுப்பினராக மாறலாம். இதுதவிர, ஆடுகளத்தில் டிஜிட்டல் உலகை மேலும் பிரபலப்படுத்துவதும் நோக்கமாக இருக்கும்’’ என்றார்.
``சென்னை சிட்டி கால்பந்து கிளப்பின் புகழை மீண்டும் கொண்டுவருவதுதான் இதன் பிரதான நோக்கமாகும். டிஜிட்டல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் புதிய தளத்திற்கு கால்பந்து விளையாட்டை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கிளப்பின் மதிப்பை மேலும் உயர்த்தும். இது கிளப்பின் இலக்கை எட்ட உதவியாக இருக்கும்’’ என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
முன்னாள் ஐ-லீக் சாம்பியனான சென்னை சிட்டி எப்சி, உரிம விதி முறை சிக்கல்கள் காரணமாக இந்தசீசனில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசன் போட்டிகள் நாளை (26-ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இம்முறை சென்னை சிட்டி எப்சி-க்கு பதிலாக தகுதிச் சுற்றில் 2-வது இடம் பிடித்த கென்க்ரே எப்சி களமிறங்குகிறது.