கிரிப்டோகரன்சி; கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்

கிரிப்டோகரன்சி; கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்
Updated on
1 min read

கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதனை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ளது.

கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுடிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியும் கவலை தெரிவித்து வந்தன.

இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வந்தது.

அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தது.

கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க ஆலோசனை மேற்கொண்டது.

நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம் இதற்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் எனத் தெரிகிறது.

கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இதே தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா இருக்கும் எனத் தெரிகிறது.

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கிரிப்ட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பின்பு பங்குச்சந்தை போலவே கிரிப்டோ சந்தையும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in