Published : 11 Oct 2021 10:04 PM
Last Updated : 11 Oct 2021 10:04 PM
தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும் 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67 கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.
இந்தத் தவணையுடன் நடப்பு நிதியாண்டில் தகுதியான மாநிலங்களுக்கு வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியமாக ரூ.69,097 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 275-வது சட்டப்பிரிவுப்படி வருவாய் பகிர்வுக்குப் பிந்தையப் பற்றாக்குறை மானியம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் கணக்குகளில் பற்றாக்குறையைப் போக்க 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியம் மாதத் தவணைகளாக வழங்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதற்குத் தகுதியான மாநிலங்களை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட பகிர்வைக் கணக்கில்கொண்டு மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையேயான பற்றாக்குறை அடிப்படையில் இது முடிவு செய்யப்படுகிறது.
2021-22-ஆம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு ரூ.1,18,452 கோடி வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இவற்றில் இதுவரை ரூ.69,097 கோடி (58.33%) வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியாணா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம். நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT